
நான் கடவுள் பிதாமகன் வரிசையில் மற்றும் ஒரு ‘பாலா-ஃபார்முலா’ படம். ஆதாரமாக ஒரு விளிம்புநிலை கதாநாயகன் அதீதமான பலத்துடன் இருப்பான். அவன் இறுதியில் அநீதியைக் கண்டு பொங்கி எழுந்து தீயவர்களை அழிப்பான். படத்தில் தாங்க முடியாத சோகமும், மிக அழுத்தமான காட்சிகளும் நிரம்பிக் காண்போரைத் துயரக் கடலில் தள்ளும். விளிம்புநிலை மனிதன் கண்தெரியாத பாடகனாகவோ, மூளை வளர்ச்சியற்றவனாகவோ, சுடுகாட்டுக் காவல்காரனாகவோ இருக்கலாம். அடிப்படையில் அவன் மிகவும் பலசாலி. கடுமையான வன்முறைக் காட்சிகள் கட்டாயம் இருக்கும். அற்புதமான படப்பிடிப்பு, அருமையான இசை. மொத்தத்தில் காண்போரைக் கடும் மன அதிர்ச்சிக்கும், வேதனைக்கும், ஆழ்மனத் தாக்குதலுக்கும் உள்ளாக்குவதே பாலா ஃபார்முலா. இதன்படியே ‘நான் கடவுள்’ இருந்த போதிலும்கூட இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான தமிழ்ப் படமாக அமைந்து விடுகிறது.
இதுவரை தமிழ் சினிமாக்களில் ஒரு சாமியார் கதாநாயகனாக வந்ததேயில்லை. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் ‘திகம்பர சாமியார்’ படத்தில் கூடப் பெயருக்குத்தான் நம்பியார் திகம்பர சாமியாரே தவிர அவர் உண்மையில் ஒரு துப்பறியும் சிங்கமே.
முதலில் கீழ்க்கண்ட இரு காரணங்களுக்காக என் பார்வையில் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிற்து.
ஒன்று, தமிழ் சினிமாவில் கதாநாயகி மாடு மேய்க்கும் பெண்ணாக இருந்தாலும் கூடச் செக்கச் செவலென, தளதளவென்று, முடிந்தால் பஞ்சாப் தேசத்துக் கிளியாக இருப்பதும் தமிழ் சினிமாவின் முதல் இலக்கணங்களில் ஒன்று. தமிழுக்காகத் தன் மூச்சு, பேச்சு எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருக்கும் பாரதிராஜா, சீமான், சேரன் வகையறா அக்மார்க் திராவிடத் தமிழர்கள் கூட ஒரு கிராமப்புறத் தமிழ்ப் பெண் பாத்திரத்திற்குச் சுமாரான கரிய நிறமுடைய பெண்ணைக் கதாநாயகியாகப் போடத் துணிந்ததில்லை. அப்படிப்பட்ட தமிழ்த் திரைச்சூழலில், ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான குரூபிகளைப் படம் முழுவதும் க்ளோசப் காட்சிகளில் காண்பிக்க ஒரு தமிழ்ப் பட இயக்குனருக்கு அபாரத் துணிச்சல் வேண்டும். இவர்களை நான் காண்பித்தாக வேண்டும், அப்படித்தான் காண்பிப்பேன் என்று துணிந்த இந்த இயக்குனரை நான் பாராட்டுகிறேன். புற்று நோய் என்ற நோயின் பெயரைச் சொன்னாலே தனக்கும் அந்த நோய் வந்து விடும் என்று நினைக்கும் போலித்தனமான புதிய ‘பத்மஸ்ரீ’க்கள் இருக்கும் அதே சூழலில் இப்படியும் ஒரு இயக்குனர்.
இரண்டாவது, தமிழ் அறிவுச் சூழலிலும் சரி, திரையுலகிலும் சரி இந்துத் துறவிகளைக் கேவலமானவர்களாகவும் கேலிக்குரியவர்களாகவும் போலிகளாகவும், காமாந்தகர்களாகவும் காண்பிப்பது மரபாகவே இருந்து வருகிறது. அண்ணாதுரை ஆரம்பித்து வைத்த இந்த விஷமரபை இன்றைய விவேக்குகள்வரை தொடர்வது நின்றபாடில்லை. மிகவும் பிரபலமடைந்த ராகவேந்திரா போன்ற கடவுள் நிலையடைந்த பெருமான்களைக் காண்பிக்கும் சினிமாக்கள் மட்டுமே விதிவிலக்கு. பல்லாயிர வருடப் பாரம்பரியம் உடைய ரிஷிமரபைத் தொடரும் உண்மைத் துறவிகள் தமிழ் நாட்டுக்குள் நுழைந்து விட்டுப் பாதுகாப்பாக வெளியேறி விட முடியாது என்ற சூழல் திராவிட இயக்கக் கேன்சரால் அரிக்கப்பட்ட தமிழ் திரையுலகத்தால் உருவாக்கப் பட்டிருக்கிறது.
அதே நேரத்தில், கிறிஸ்துவப் பாதிரியார்கள் எப்பொழுதுமே தூயவர்களாகவும், கருணையும் அன்பும் ததும்புகிறவர்களாகவும் காண்பிக்கப் படுவதும் தமிழ்த் திரையுலகின் முக்கிய இலக்கணங்களில் ஒன்று. இந்து மதத் துறவிகளை நல்ல விதத்தில் தன் படங்களில் சித்தரிக்கத் துணிந்ததும், காசி நகரின் மேன்மையைத் துணிவாகப் பேசத் துணிந்ததும் மற்றொரு அசாத்திய துணிச்சலாகும். ‘பைத்ருக்கம்’ படத்தின் மூலம் இடதுசாரி சினிமாச் சூழலில் ஒரு புரட்சியை நிகழ்த்திய ஜெயராஜைப் போலவே திராவிட மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழ்த் திரையுலகில் துணிந்து துறவிகளை நல்ல முறையில் காண்பிக்கத் துணிந்த பாலா மற்றொரு மைல்கல்லைத் தொட்டிருக்கிறார்.
நான் கடவுள், பிச்சைக்காரர்களைக் கேலிப் பொருளாக்காமல், அவர்களது உலகை யதார்த்தமாகக் காண்பிக்கிறது. ‘டிராஃபிக் சிக்னல்’ படத்தில் வருவதுபோல அவர்கள் அனைவருமே ஏமாற்றுக்காரர்களாகவும் காண்பிப்பதில்லை. உண்மையான பிச்சைக்காரர்களையே கொண்டு, எந்தவித சமரசங்களும் செய்யாமல் காண்பிக்க முயன்றது இந்தப் படத்தின் வலு. படம் பார்த்தவர்களைப் பல நாட்கள் உறக்கம் இல்லாமல் செய்துவிடக் கூடிய வலுவான பாத்திரங்கள், காட்சி அமைப்புகள். உக்கிரமான ஒரு படம்; சந்தேகமேயில்லை. அத்தோடு நின்றிருந்தாலோ, அந்தப் பிச்சைக்காரர்களின் பிரச்சினைகளை மட்டுமே அலசியிருந்தாலோ இந்தப் படம் உலக அளவில் பேசப்படும் ஒரு படமாக ஆகியிருக்கும். இரண்டு விளிம்புநிலை மாந்தர்களைப் பற்றிப் பேசும் திரைக்கதை, அகோரி சன்யாசிகளைப் பற்றியும், பிச்சைக்காரர்களின் வாழ்வு பற்றியும் மிக ஆழமாகச் சிந்திக்க வைத்திருப்பது இந்தப் படத்தின் வெற்றி. அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், பாசம், அன்னியோன்யம் உண்டு என்ற உண்மையை, ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலில் வருவதை, இந்தப் படம் பிரதிபலித்திருக்கிறது.
காசி நகரில் ருத்ரனின் அப்பாவும், தங்கையும் நகர் முழுவதும் ருத்ரனைத் தேடி அலைவது போல வைத்திருந்தால் காசியை இன்னும் மிக நெருக்கமாக, ஆன்மீகமாக மக்களிடம் கொண்டு சென்றிருக்கலாம். ஏனோ காசியில் ஆறு மாதம் கேம்ப் அடித்தும் ஹரிச்சந்திரா காட்டையும், அனுமன் காட்டையும், கங்கையையும் தாண்டிக் கேமரா போகவில்லை.
ருத்ரன் ஒரு சித்தர் பாடலைப் பாடுகிறார். தமிழ்ப் பாடல்களிடம் பரிச்சயம் காசியில் எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்பதையும் லேசாகக் கோடி காட்டியிருக்கலாம். எல்லாம் துறந்துவிட்ட ருத்ரனின் மனதில் தன் பெற்றோர்களிடம் கோபமும் வன்மமும் கனன்று கொண்டிருப்பதாகக் காண்பிப்பதைத் தவிர்த்திருக்கலாம். “இத்தனை வருடமாகச் சாப்பிடாமலா இருந்த?” என்று ருத்ரன் தன் அம்மாவிடம் கேட்கும் கேள்வி அவரை ஓர் உயரமான பீடத்தில் இருந்து சாதாரண மனிதனாகக் கீழே இறக்கி விடுகிறது. ஆனால் ருத்ரனின் குரு ஒருவேளை இதுபோன்ற மிச்சம் மீதம் இருக்கும் கீழான உணர்வுகளையும் விட்டுவிடும் படித்தான் பணிக்கிறாரோ என்னவோ. அப்படிப் புரிந்து கொண்டால் ருத்ரனின் கோபம் அவரிடம் மிஞ்சியிருக்கும் குறைபாடாக, களையப்பட வேண்டியதாக, உணர்த்தப்படுகிறது எனக் கொள்ளலாம்.
கைகால்கள் இல்லாத ஒரு சித்தரைப் பிச்சைக்காரர்கள் வணங்கி வருகிறார்கள். (இவரைப் போலவே ஒரு நிஜ சித்தர் விழுப்புரத்தில் இருந்திருக்கிறார். கொல்லிமலை சாமியாரின் குரு. இப்போது உயிருடன் இல்லை). யாரையும் கண் திறந்து பார்க்காத, யாரிடமும் பேசாத அவர் ருத்ரன் ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்று தொடங்கி நீளமான சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைச் சொன்னதும் கண்திறந்து பார்க்கிறார். காலில் விழுந்து கதறி அழும் பெண்ணிடம் ‘ருத்ரனிடம் போ’ என்று வாய் திறந்து பேசுகிறார். ருத்ரன் போன்ற அகோரிகளுக்கு நல்லவர் யார், கெட்டவர் யார் என்று உணர்ந்து கொள்ளும் சக்தி இருப்பதாகக் காட்டப்படுகிறது. துஷ்டர்களை ருத்ரன் ஸ்லோகங்கள் சொல்லியபடி அழிக்கிறார்.
எல்லாம் துறந்த சாமியாருக்கு ஏன் குருவிடம் பந்தம் என்று ஒரு சிலர் அபத்தமான கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். எல்லாம் துறந்த ரிஷிகள் ஞானகுருவையும் கட்டாயமாகத் துறக்க வேண்டும் என்பதாக எந்த சாஸ்திரத்தில் இந்த மேதாவிகள் படித்தார்கள் என்பது தெரியவில்லை. அறியாமையில் பிறக்கும் அபத்தக் கேள்விகளைப் பகுத்தறிவாக அறியும் அபத்தம் தமிழ் நாட்டில்தான் உண்டு. ருத்ரன் குருவின் கட்டளையை மேற்கொள்வதிலும் மீண்டும் குருவிடம் தஞ்சமடைவதிலும் எவ்விதத் தவறும் இல்லை.
படத்தின் ஜீவன் உடல் ஊனமுற்ற, மனநிலை குன்றிய, குரூர முகம் கொண்ட அந்த ஜீவன்கள்தாம். ஒவ்வொருவரிடமும் தன் அன்பால் வேலை வாங்கியிருக்கிறார் பாலா. பிரமாதமான நடிப்பு. ஒவ்வொரு முகமும் வாழ்நாளில் மறக்க முடியாதபடி நிரந்தரமாகப் பதிந்து விடுகிறது. பிச்சை எடுத்துக் கஷ்டப்படும் அவர்களது வாழ்க்கையை மிக வித்தியாசமான கோணத்தில் காண்பிக்கிறார் பாலா. அடுத்த முறை இந்த ஜீவன்களை நாம் கோவில் வாசலிலோ, மலைப்படிகளிலோ, தெருவிலோ, பஸ்ஸ்டாண்டிலோ, ரெயிலிலோ பார்க்கும் பொழுது நம் பார்வை வேறாக இருக்கும். இந்தப் படத்தின் மிகச் சிறந்த சாதனை இதுதான்.
படத்தின் அடுத்த வலு ஜெயமோகனின் வசனங்கள். மிக உக்கிரமான ஒரு படத்தை லகுவாக்கிக் கொஞ்சம் சிரிக்கவும் வைப்பது அவரது வசனங்களே. வசனம் படத்துக்குப் பெரும்பலம். கருத்தாக்கத்திலும் ஜெயமோகனின் பங்கு பெருமளவு இருப்பது தெரிகிறது. உக்கிரத்துக்கு உக்கிரம், கேலிக்குக் கேலி. சில நையாண்டிகள் வெளியில் சத்தமாகக் கேட்டு விட்டால் ஏதும் பிரச்சினை வந்துவிடுமோ என்ற ஜாக்கிரதை உணர்வில் வசனங்களை இசை கொண்டு அமுக்கியிருக்கிறார்கள். பல வசனங்கள் வரும் காட்சிகள் வெட்டப் பட்டுள்ளன, ஊமைப்படுத்தப் பட்டுள்ளன.
கண்ணில்லாத பிச்சைக்காரி ருத்ரனிடம் கேட்கிறாள்: “எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்ற அல்லா சாமி கூட என்னை மாதிரி கண் தெரியாத பிச்சைக்காரிய கஷ்டப்படுத்ததான் விரும்புதா? ஏசு சாமி என்னைக் கைவிட்டுடுச்சு… தெருவுக்குத் தெரு இருக்கற பிள்ளையார், காளியாத்தா, மாரியாத்தா ஒரு சாமி கூட என்னைக் காப்பத்தலியே? நீதான் சாமி என்னைக் காப்பாத்தணும்.” தன்னை ‘காலபைரவன்’ என்ற இந்துக்கடவுளின் அம்சம் என்று சொல்லிக்கொள்ளும் ருத்ரன் அவளைக் காக்கிறான். இதில் அல்லா சாமி என்ற இடம் வரும்பொழுது இசை பொங்கி வசனத்தை அமுக்குகிறது. இந்துக் கடவுள்களையோ, இந்துக்களில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரையோ குறித்து எவ்வளவு கேவலமாக வசனம் பேசினாலும் அதை அனுமதிக்கும் சென்சார் போர்டு, இந்த வசனங்களை கவனமாக அமுக்குவது அவர்களுக்கிருக்கும் மனச்சாய்வையே காட்டுகிறது. நல்ல தொடைநடுங்கி செக்யூலரிஸம்!
“இவரு பெரிய அம்பானி. அம்பானின்னா? அதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது இந்த செல் ஃபோன் விக்கிறவரு.”
“நாங்களும் கொஞ்சம் பொழச்சிக்கிடுவோமில்ல, நாங்கள்ளாம் எப்ப முதலாளியாகி, எப்ப தொழிலதிபராகி எப்ப நடிகையை கல்யாணம் செய்யிறது?”
என்பது போலப் படம் முழுக்க ஜெயமோகனுக்கே உரிய நையாண்டி வசனங்கள். காசியைப் பற்றிச் சொல்லும் முதல் அறிமுகத்திலேயே ஜெ.மோ.வின் முத்திரை விழுந்து விடுகிறது.
“தர்மம் தலை காக்கும் என்று நம்பி நமக்குப் பிச்சை போடுகிறவர்களின் நம்பிக்கைக்கு உறுதுணையாக நாம் இருக்கிறோமே” என்று கண்ணில்லாத அம்சவல்லி சொல்வது அழுத்தமான வசனம். இந்தியா போன்ற வறுமை நிறைந்த நாட்டில், உடல் ஊனமுற்றோரும், மன நோயாளிகளும் ஆதரவற்றோரும் வேறு எந்த நாட்டையும்விட அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் எந்தவிதமான அரசாங்க உதவியும் அவர்களைக் காக்க முடியாது. சேவை நிறுவனங்களும் கூட எல்லோர் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. கோடிக்கணக்கான அநாதரவான மக்களுக்கு அன்றாடம் உணவு வழங்கி அவர்களையும் வாழ வைப்பது அந்த விளிம்புநிலை மனிதர்களிடமிருந்து உபகாரமாக மதமாற்றத்தையோ பிற உதவிகளையோ எதிர்பாராத தர்மத்தின்பாலான நம் நம்பிக்கைதானே? அதைப் படம் பார்ப்பவர்கள் மனதில் பதியவைப்பது அந்த ஜெயமோகனின் அழுத்தமான வசனம். அமெரிக்கா போல சோஷியல் செக்யூரிட்டி வழிமுறைகள் இல்லாத இந்தியாவில் அதற்கு மாற்றான பாதுகாப்பை வழங்குவது நம் பண்பாடும், நம்பிக்கைகளும், தர்மம் தலைகாக்கும் என்ற இந்து தர்மமும்தானே?
எரியும் பிணங்களும் கோவண சாமியார்களும், கஞ்சாவும் மட்டும்தான் காசியா? அகோரிகளை மையமாக்கியதாலோ என்னவோ அவற்றிற்கு மட்டும்தான் அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. காசி என்ற படிமம் பிரதியெடுக்கப்பட்ட விதத்தில் எனக்கு முழுமை தென்படவில்லை.
காசி முக்தி அளிப்பது. ஆனால் இயக்குனர் பாலாவைக் காசி ஏதோ ஓர் ஆழத்தில் பிணைத்திருக்கிறது. காசி என்ற பாத்திரம் குருட்டுக் கதாநாயகனானது ஒரு படத்தில் என்றால், அந்த நகர் குருட்டுக் கதாநாயகனை உருவாக்குகிறது இந்தப்படத்தில். ஆனால் இது வேறுவிதக் குருடு. லௌகீகத்தைப் பார்க்க மறுக்கும், பந்தங்களிலிருந்து விடுதலையாகத் துடிக்கும் குருடு. இந்தக் குருடு ஒரு லௌகீகக் குருடியைக் காப்பதில் விழித்துக்கொண்டு தன்னைக் கண்டு கொள்கிறது.
ஆர்தர் வில்சனின் கேமரா காட்சிகளுக்குத் தேவையான உணர்வுகளை ஊட்டுகிறது. பாதாளக் கோவிலின் லைட்டிங், கழைக் கூத்தாடியின் கீழிருந்து காண்பிக்கும் வானம், சுடுகாட்டு நெருப்பின் ஜுவாலைகள், நதியின் பாய்ச்சல், சண்டைக் காட்சிகளின் வேகம் என்று ஒவ்வொன்றையும் மெருகேற்றிக் காண்பிக்கிறார். தியேட்டரில் பார்த்தால் மட்டுமே ஒவ்வொரு ஃப்ரேமிலும் மிளிரும் அழகை ரசித்து அனுபவிக்க இயலும். போலீஸ் ஸ்டேஷன் காட்சிக்குக்கூட வித்தியாசமான கலரையும் லைட்டையும் பயன்படுத்தியிருக்கிறார். “இனி நான் நினைத்தால் கூட அதேபோல காட்சிகளை என்னால் எடுக்க முடியாது” என்கிறார் அவர். உண்மைதான்.
சென்சாரின் கடுமையான வெட்டுக்களினால் ஒருசில இடங்கள் தொடர்பு இல்லாமல் தொங்குகின்றன. சிறுபான்மையினர் மனது புண்படக் கூடாது என்பதற்காக மாதாகோவில் காட்சியை அரைகுறையாகக் காண்பித்தாற் போலத் தெரிகிறது. பல வசனங்களிலும் கை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக நாயரின் பிணத்தை அகோரி என்ன செய்தார் என்பது பார்வையாளர்களுக்குப் புரியாமலேயே போய் விடுகிறது. அந்த வசனம் விழுங்கப் பட்டதன் காரணமாக அந்தப் பாத்திரம் ஏற்படுத்தியிருக்க வேண்டிய அதிர்ச்சி ரசிகர்களிடம் எற்படாமலேயே போய்விடுகிறது. இதைப் போலவே அம்சவல்லி எப்படி கன்னிகாஸ்தீரிகளிடம் அடைக்கலமாகி மதம் மாற்றப்படுகிறார், எப்படி வெளிவருகிறார் என்பவையெல்லாம் வெட்டப்பட்டு படம் கோர்வையிழந்து விடுகிறது.
இறுதிக் காட்சியில் பிறப்பும், இறப்பும் துன்பம் என்று பிறப்பிறப்பில்லாத பெருவாழ்வு கேட்கும் ஞான நிலையை அடைந்து அம்சவல்லி விடுதலை கேட்கிறார். அந்த விடுதலையைத் தன் துறவு நியாயத்தின்படி அகோரி சாமியார் வழங்கி விடுகிறார் என்று புரிந்து கொள்வது சாதாரண ரசிகர்களுக்கு அத்தனை எளிதான காரியமில்லை. அதற்கான அதிகப்படியான வசனங்கள் சில அங்கே வைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அம்சவல்லி பேசும் குறைந்தபட்ச வசனங்கள் கூட ஒழுங்காகக் கேட்காமல் அமுக்கப்படுகின்றன. இயக்குனர் கடும் நிர்பந்தத்தில் அந்த வசனங்களை மூடி மறைத்திருக்கிறார் என்பது புரிகிறது. மதமாற்ற அரசியல் செய்யும் வந்தேறி மதங்களுக்கு ஒத்தூதும் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் இந்தியாவில் இருக்கும்வரை உண்மைகளைப் பேசப் படைப்பாளிகளுக்குச் சுதந்திரம் இருக்காது என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபிக்கிறது.
இளையராஜா பின்னணி இசையில் அழுத்தமாக இன்னொரு முறை தன் மேதைமையை நிரூபித்திருக்கிறார். ஏதோ சிம்ஃபனியைப் போலிருக்கும் ஒரு இசைக்கோர்வை சண்டைக் காட்சியில் பின்னணி இசையாக வருகிறது. ஒரு சண்டைக் காட்சிக்காக இத்தனை மெனக்கெடலா என்று தோன்றுகிறது. பாடல்கள் எல்லாம் ஏற்கனவே கேட்ட உணர்வை அளிக்கின்றன. பின்னணி இசை படத்துடன் பரிபூரணமாக இணைந்து விடுவதால் பிரித்து உணர முடிவதில்லை. இதைப் போன்ற ஒரு கருவுடைய குரு” என்ற ஒரு மலையாளப் படத்திற்கு (அந்தப் படத்தில் கதாநாயகன் மோகன்லால் ஒரு மாய உலகிற்கு ஒரு இந்துத் துறவியினால் எடுத்துச் செல்லப் படுவார், அந்த உலகில் இருக்கும் மனிதர்கள் எல்லோரும் பிறவியிலேயே குருடர்களாக இருப்பார்கள், இங்கு விடுதலை வேண்டி நிற்கும் பிச்சைக்காரர்கள் அங்கே குருடர்கள்) இளையராஜா அமைத்த பின்ணணி இசை இன்றும் பேசப்படுகிறது. அதுபோலவே இந்தப் படத்திற்கும் இளையராஜாவின் இசை ஒரு தூண்.
ஒரு சில குறைபாடுகளும் இல்லாமல் போகவில்லை.
ஆன்மீக விடுதலை ஜெமோவுக்கும், அவல விடுதலை பாலாவிற்கும் முதன்மையானதில், அவல விடுதலையை ஆன்மீக விடுதலையாகப் புரட்டிப்போட்டு அதன்மேல் ஏறி உட்கார்ந்து பாலா அலட்சியமாக பீடி குடிப்பதாக எனக்குள் ஒரு பிம்பம் விரிந்தது. ஜெமோ செகண்டரி ஸ்மோக் பிடிக்காது என்று அங்கிருந்து போயிருந்தார்.
பிச்சைக்கார மாஃபியாவின் தலைவன் போலீசையே தன் கைக்குள் வைத்திருக்கும், சகல வல்லமை உள்ள ரவுடி. அவனிடம் நிறைய அடியாட்கள் இருக்கிறார்கள். ஒரு சாதாரண சன்யாசியிடம் அவன் நாயடி வாங்குவது முற்றிலும் சினிமாத்தனம். இங்கும் இந்தப் படம் பிற யதார்த்தப் படங்களில் இருந்து விலகிச் சென்று படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. ருத்ரன் தன் ஆன்ம பலத்தால் எதிரிகளை பலமிழக்கச் செய்வதாகக் காட்டியிருந்தால் கொஞ்சம் அர்த்தம் இருந்திருக்கும். உதாரணமாக போலீசார் உத்ரனிடம் பயப்படுவது அவரது ஆன்ம பலத்திற்கும் அஞ்சியே என்பது போலக் காண்பித்திருக்கிறார். ருத்ரன் இருக்கும் பாழடைந்த மண்டபத்திற்குள் செல்லும் முன்னர் அந்தப் போலீஸ்காரர் தன் ஷூக்களைக் கழட்டி வெளியே விட்டுவிட்டுச் செல்வது அயோத்தியில் ராணுவத்தினரும் போலீசாரும் பவ்யத்துடன் தங்கள் காலணிகளைக் கழட்டி விட்டு ராமலாலாவை வணங்கக் கோவிலுக்குள்ளே செல்லும் காட்சியை நினைவு படுத்துவதைத் தவிர்க்க முடிவதில்லை.
மூன்று கொலைகளைப் பட்டப் பகலில் நூற்றுக்கணக்கானோர் முன்பாகச் செய்த பின்னரும் கூட போலீசார் கண்களில் படாமால் சாவகாசமாக ருத்ரனால் ரெயில் பிடித்துக் காசிக்குப் போய்த் தன் குருநாதரை அடைய முடிகிறது. இதுவும் ஒரு யதார்த்த ஓட்டையே.
பந்தங்களை அறுத்தெறிந்து விட்டு வரும்படி குரு ருத்ரனைச் சொல்லி அனுப்புகிறார். அதை எப்படி ருத்ரன் செய்தார் என்பது குறித்து எந்தவிதமான காட்சிகளும் இல்லை. அப்பா, அம்மாவிடம் கோபம் கொள்வதும், வீட்டிற்கு வர மறுத்து பழனி மலை முருகன் போலக் கோவணத்துடன் மலை மீது உட்கார்ந்து கொண்டு கஞ்சா அடிப்பதும் மட்டும்தான் பந்தங்களை அறுப்பதா என்ன? அதைக் காசியிலேயே செய்து தொலைத்திருக்கலாமே? அதற்கான உரிய காட்சிகளோ வசனங்களோ வைக்கப் படவில்லை என்பது மற்றும் ஒரு குறை.
இந்தச் சிறுசிறு குறைகளை மீறியும் இந்தப் படம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வலுவான படமாக அமைந்திருப்பது அந்த அகோரி சன்யாசிகளின் ஆசீர்வாதத்தினாலும் கூட. படத்தைப் பற்றிய ஒரு கலைஞர் டி.வி. நிகழ்ச்சியில் ஏராளமான சாமியார்கள் பாலாவுக்கு ஆசீர்வாதம் செய்வதைக் காண்பித்தார்கள். கருணாநிதியால் வழக்கமாகப் பண்டாரம், பரதேசி என்று விமர்சிக்கப்படும் இமயமலைச் சாமியார்கள் ஜடாமுடியுடன் தோன்றி பாலாவுக்கு ஆசீர்வாதம் செய்த காட்சிகள் காண்பிக்கப்பட்டன. அந்த அருள் பூரணமாக இந்தப் படத்தில் இறங்கியுள்ளது தெளிவு.
படத்தை அவசியம் பாருங்கள்.

No comments:
Post a Comment